muthu

muthu
muthu

wwe slide

kural

திருநாவுக்கரசு

Tuesday 2 August 2011

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
ஐந்தாம் திருமுறை




5.055.திருநாரையூர்

திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சௌந்தரேசர்.
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.


1622 வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்
காறு சூடலும் அம்ம அழகிதே. 5.055.1

மணம் வீசுகின்ற பூம்பொழில்களை உடைய நாரையூரின்கண் எழுந்தருளியுள்ள நம் இறைவர், பிறிதொன்றற்கில்லாத பெருஞ்சிறப்புடைய திருக்கயிலாயத்தை உடையவர். உமையம்மையை ஒருபங்கில் உடையவர்; வளைந்த பிறை சூடியவர். ஆயினும் கங்கையாற்றினைச் சடையிற் சூடல் மிக்க அழகும் வியப்பும் உடையதே.


1623 புள்ளி கொண்ட புலியுரி யாடையும்
வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும்
நள்ளி தென்டிரை நாரையூ ரான்நஞ்சை
அள்ளி யுண்டலு மம்ம வழகிதே. 5.055.2

தௌந்த நீர்வளம் உடைய நாரையூரின் கண் எழுந்தருளியுள்ள பெருமான், புள்ளிகளை உடைய புலித்தோலாடையும், வெள்ளி போன்ற நிறம் கொண்ட திருநீற்றுப் பூச்சுடைய திருமேனியும் உடையவராயினும், நஞ்சைஅள்ளி உண்டல் மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும்.


1624 வேடு தங்கிய வேடமும் வெண்தலை
ஓடு தங்கிய வுண்பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூ ரான்நடம்
ஆ பைங்கழ லம்ம வழகிதே. 5.055.3

நாட்டின்கண் தங்கிய புகழை உடைய நாரையூரில் எழுந்தருளியுள்ள பெருமான், வேடத்தன்மை தங்கிய திருவேடமும், வெண்தலை ஓட்டில் தங்கிய உணவை உண்ணும் கொள்கையும் உடையவராயினும் நடம் ஆடுகின்ற பைங்கழல் சேவடி மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும்.


1625 கொக்கின் தூவலுங் கூவிளங் கண்ணியும்
மிக்க வெண்டலை மாலை விரிசடை
நக்க னாகிலும் நாரையூர் நம்பனுக்
கக்கி னாரமு மம்ம வழகிதே. 5.055.4

திருநாரையூரில் எழுந்தருளியுள்ள நம் பெருமான் கொக்கு வடிவாய் நின்ற அசுரனின் இறகும், கூவிள மலராலாகிய தலைக் கண்ணியும், மிகுந்த வெண்தலைமாலையும், விரிந்த சடையும் உடைய திகம்பரனேயாயினும் அக்கின் மாலை அணிந்திருத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.


1626 வடிகொள் வெண்மழு மான்அமர் கைகளும்
பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்
அடிகள் தம்வடி வம்ம வழகிதே. 5.055.5

வடித்தலைக்கொண்ட ஒளியால் வெள்ளிய மழுப்படையும் மானும் விரும்புகின்ற கரங்களும், திருநீற்று வெண்பொடி பூசிய செம்பவளம் ஒத்த மேனியும், ஒரு பங்கில் இருக்கும் நடித்தலைக் கொண்ட நன்மயில் போன்ற உமாதேவியும் உடைய திரு நாரையூர்ப் பெருமான் வடிவு, மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.


1627 சூலம் மல்கிய கையுஞ் சுடரொடு
பாலும் நெய்தயி ராடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆல நீழலு மம்ம வழகிதே. 5.055.6

உலகத்தில் புகழ் நிறைந்த திருநாரையூர், நம் பெருமான் சுடரொடு நிறைந்த சூலம் பொருந்திய கையும், பால், நெய், தயிர் முதலிய பஞ்சகவ்வியம் ஆடிய தன்மையும் உடையவராயினும், ஆலநிழலில் இருந்து அறம் உரைத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.


1628 பண்ணி னால்மறை பாடலோ டாடலும்
எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும்
நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர்
அண்ண லார்செய்கை யம்ம வழகிதே. 5.055.7

இசையொடு பொருந்திய நான்மறைகளைப் பாடுதலும், ஆடுதலும், நல்ல எண்ணமில்லாத தீயோர்களது முப்புரங்களை எரித்தலும், தம்மைப் பொருந்தியவரது துயரங்களைத் தீர்த்தலும் ஆகிய திருநாரையூர் அண்ணலார் செய்கைகள் அனைத்தும் மிக்க வியப்பும் அழகும் உடையனவேயாம்.


1629 என்பு பூண்டெரு தேறி யிளம்பிறை
மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே
நன்ப கற்பலி தேரினும் நாரையூர்
அன்ப னுக்கது வம்ம வழகிதே. 5.055.8

எலும்புகளைப் பூண்டு, எருதின்மேல் ஏறி, இளம் பிறையினை மின்னலை முறுக்கினாலொத்த ஒளிச்சடையின் மேல் விளங்கச் சூடி, நல்ல பகலிலும் பலிதேர்வராயினும், திருநாரையூரில் உள்ள அன்பு வடிவாய சிவபெருமானுக்கு அது மிக்க வியப்பும் அழகும் உடையதே.


1630 முரலுங் கின்னர மொந்தை முழங்கவே
இரவி னின்றெரி யாடலு நீடுலாம்
நரலும் வாரிநன் னாரையூர் நம்பனுக்
கரவும் பூணுத லம்ம வழகிதே. 5.055.9

ஒலிக்கின்ற கின்னரமும், மொந்தையும் முழங்க, நீண்டு நிகழும் இரவில் இடுகாட்டில் நின்று எரித்து ஆடுதலும், அரவினைப் பூணுதலும் ஆகியவை கடல் ஒலிக்கும் திருநாரையூர் நம் பெருமானுக்கு மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.


1631 கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை
எடுத்த வாளரக் கன்தலை யீரைஞ்சும்
நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல்
அடுத்ததன்மையு மம்ம வழகிதே. 5.055.10

கொன்றையினை உடைய அழகார்ந்த சடையனுக்குரிய திருக்கயிலாயத் திருமலையை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணனது பத்துத் தலைகளும் நடுங்கி நெரியும் வண்ணம் திருநாரையூர்ப் பெருமான் திருவிரல் இயக்கிய தன்மை வியப்பும் அழகும் உடையதேயாகும்.

0 comments:

Post a Comment

vedio

vedio

thankyou


Custom Glitter Text
நன்றி